நுபி லான் – மணிபூரி பெண்களின் இதிகாச போர் தந்த வாழ்க்கை தரம்
- த்ருவா பல்ராம்
- மொழியாக்கம்: சுபஸ்ரீ பீமன்
இந்தியா முழுவதிலும் மணிபூர் மாநிலம்
தாய்வழியாட்சி முறைக்கு பிரபலமானது. இந்த மாநிலத்தின்
வளர்ச்சியில் முக்கிய பங்கு விதித்ததால், மணிபூரின் பெண்களிற்கு சமுதாயத்தில் நல்ல
மதிப்பு இருந்திருக்கிறது. மணிபூரின் பெண்கள் முற்போக்கானவர்கள். அவர்களின் முற்போக்குச்
சிந்தனை நுபி லான் எழுச்சியின் மூலமாக வேர்விட்டு வளர்ந்தது.
பிரிட்டிஷ் பேரரசிற்கு எதிராக நடத்தப்பட்ட இந்த எழுச்சி
மிக வலிமையானதாக கருதப்பட்டது.
நுபி லான் என்பதை “பெண்களின் போர்” என்று தமிழில் மொழிபெயர்க்கலாம்.
இந்த போர் 1904 ஆண்டு பிரிட்டிஷ் பேரரசிற்கு எதிராக நடத்தப்
பட்டது. பிரிட்டிஷ் பேரரசு மணிபூரியைச்
சேர்ந்த ஆண்களை கட்டாய உழைப்பின் பெயரில் எரிந்து போயிருந்த காவல் கொட்டகையை பழைய நிலைக்கு
மீட்கும் பணியில் ஆட்படுத்தியது. ஒரு வாரத்திற்கு மேல் நடந்த இந்த போராட்டத்தில்
5000கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். ஆங்கிலேயர்களால் இந்த போராட்டத்தை ஒடுக்க
முடிந்தாலும், கட்டாய உழைப்பு உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டியதால் தோல்வியுற்றார்களென்றே
சொல்லவேண்டும்.
முதல் நுபி லான் சந்திப்பு - மணிபூர் மாநில காப்பகங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்
அறுவடைக் காலத்தில்
அதிகமான அரிசி ஏற்றுமதியினால் உண்டான பஞ்சத்தை எதிர்த்து இரண்டாவது
நுபி லான் போராட்டம் 1939ஆம் ஆண்டு நடைப்பெற்றது. இரண்டாம்
உலகப் போரின் தாக்கத்தில் இருந்ததால் இந்த போராட்டத்தை
நிறுத்த ஆங்கிலேயர்களுக்கு பல மாதங்கள் ஆனது. இரண்டாவது
போராட்டத்தில் கலந்துகோண்ட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், ஆங்கிலேயர்கள்
அதை எதிர்த்த விதம் கவனிக்கவேண்டும். ஆயுதமின்றி போராடிய பெண்களின்
மேல் ராணுவ மற்றும் காவல் படையை ஏவிவிட்டது ஆங்கிலேய அரசு. வீரமான பெண்கள் பல மாதங்கள்
போராடினார்கள், பலர் உயிரிழந்தார்கள்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று, இந்த எழுச்சி சரித்திரத்தின்
ஒரு மூலையில் தூசிபடிந்தபடி கிடக்கிறது. “ஆசிரியர்களுக்கு இதன்
முக்கியத்துவம் புரியவில்லை, மாணவர்களுக்கு அக்கறை இல்லை,” என்கிறார் 23 வயது ஆசிரியரான
கீதா தேவி தனது அம்மாவும் பாட்டியும் சொன்ன கதைகளை கேட்டு வளர்ந்தார். “சின்ன வயசுல
இதப் பத்தி நான் ரொம்ப கண்டுக்கல, ஆனா பாட்டி தான் அனுபவிச்சக் கஷ்டங்களை நான் தெரிஞ்சுக்கணும்னு
ரொம்ப மெனக்கெட்டாங்க.”
போதைப்பொருட்களுக்கு எதிராக அணிவகுத்த மெய்ரா பாய்பி பெண்கள்
நுபி லான் போராட்டத்தின் தாக்கத்தால்,
கீதாவின் பாட்டி, 1977ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கான பெண்களுடன் சேர்ந்து,
சமுதாய சீர்கேடான குடிப்பழக்கத்திற்கு எதிராக போராடினார். நிஷா பந்தி அடுத்த நுபி லான்
எழுச்சியாக வெளிப்பட்டது. மணிபூரின் தெருக்களில், முக்கியமாக
இரவில், தீப்பந்தங்களுடன் ஆண்களின் குடிப்பழக்கத்திற்கு எதிராக
இந்த பெண்கள் போராடினார்கள். பெண்கள்
ஒன்று கூடி குழுவாக இருட்ட ஆரம்பித்த பிறகு ரோந்து சென்று குடித்துக் கொண்டிருக்கும்
ஆண்களிடம் அபராதம் வாங்கியோ அல்லது அடித்தோ தங்களின் வாழ்க்கை பிரச்சனையை தீர்க்கமுற்பட்டார்கள்.
எதிர்கால சந்ததியினர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க மதுக்காய்ச்சும்
ஆலைகளில் ரெய்டு நடத்தி மூட செய்தார்கள்.
திரும்பத் திரும்ப, மணிபூரின் பெண்கள் தங்கள் பிரச்சினைகளை
தாங்களேத் தீர்த்துக் கொள்ள முனைவதைப்போல் தோன்றும். மெய்ரா பாய்பி (தீப்பந்துக்காரிகள்)
என்ற அடிமட்ட இயக்கம் போதைப்பொருள்,
பெண்களுக்கு நடக்கும் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற
சமுதாயப் பிரச்சனைகளுக்கு எதிராக நடத்தப்படும் ஒரு உறுதியான இயக்கமாக
உருமாறியிருக்கிறது. இந்த இயக்கத்தில் பணியாற்றும் 27-வயது நெல்சன் சொங்க்தாம், “இது
பெண்கள் நடத்தும் புரட்சி. சமுதாயத்தின் மற்ற சிக்கல்களுக்கு எதிராகவும் இவர்கள் போராட
உதவி செய்கிறார்கள்.” பெண்களின் குரல் எழ ஊக்குவிக்கும் ஒரு சமுதாயத்தில்
அவர்கள் பயமில்லாமல் குரலை எழுப்புவது மிக முக்கியமான சமுதாய வளர்ச்சியை குறிக்கும்.
இம்பாலில் உள்ள அன்னையர் சந்தை மணிபூர் பெண்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது
கடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளிற்கு ஆறு விளையாட்டு வீரர்களை இந்தியாவின் பிரதிநிதிகளாக அனுப்பியது மணிபூர்.
இந்தியாவின் மிக முக்கிய வீராங்கனையான மேரி கோம் இந்த
மாகாணத்தைச் சேர்ந்தவர். குஞ்சராணி தேவி மற்றும் இந்தியாவின் குத்துச்சண்டை நட்சதிரமாக
கருதுப்படும் தேவேந்த்ர சிங் இந்த மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள். மணிபூரின் பிரபலமான விளையாட்டு வீரர்களில்
முக்கால்வாசிப் பேர் பெண்களே. இதன் மூலம் அவர்களின் மாநிலம்
எவ்வளவு முற்போக்குச் சிந்தனையுடையது என்றும், ஆண்-பெண்
சமத்துவம் அவர்களின் சமுதாயத்தை எந்த அளவில் முன்னேர செய்கிறதென்றும்
நாம் அறியலாம். இவை எல்லாவற்றிற்கும் விதையாக அமைந்த இந்த “பெண்களின் போர்” கட்டாய
உழைப்பிற்கும் தன்னிச்சையான வரிக்கும் எதிராக
ஆரம்பித்து மணிபூரின் எதிர்காலத்தை நிற்ணயித்தது என்பதில் வியப்பில்லை. காரணம்,
நுண் நிதி கடன்கள் வாங்குவதிலும் இதே பெண்கள் தான் முன்னிற்கிறார்கள். கடனை சரியான
நேர கெடுவுக்குள் திருப்பித் தந்து விடுவதால் நுண் நிதி நிறுவனங்கள் இவர்களை நம்பி
கடன் கொடுக்கின்றன.
என்னுடைய வேலையின் காரணமாக நான் எழுதப் படிக்கத் தெரியாத
நிறைய பழங்குடி பெண்களை சந்தித்திருக்கிறேன். இவர்கள் சிக்கனத்தாலும்
சேமிக்கும் பழக்கத்தாலும் தங்களின் பிள்ளைகளை தென்னிந்தியாவின் நல்லக் கல்லூரிகளில்
சேர்த்திருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் தங்கள் மாநிலத்தில் அரிதாக கருதப்படும்
துறைகளில் இஞ்சினியர்களாகவும், நர்சுகளாகவும், மருத்துவர்களாகவும், தொழில்
வல்லுநர்களாக பணியாற்றுகிறார்கள். இன்றைய உலகில், எல்லா தரப்பு மாணவர்களும்
விரும்புவதை போல மணிபூரின் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் கம்ப்யூடர்
துறையான ஐ.டீயிலோ, செயற்கை நுண்ணறிவு துறையிலோ அல்லது
கம்ப்யூடர் ப்ரோகிராம் எழுதும் வேலையிலோ சேரவேண்டுமென்று ஆசைபடுகிறார்கள்.
இம்பாலில் நுபி லான் நினைவகம்
இந்த லட்சியக் கனவுகளுக்குப் பின்னால், இவர்களின் பாட்டிக்களும் அம்மாக்களும்
செய்த தியாகங்களும், போராட்டங்களும், கடின உழைப்பும், மன உறுதியும் இருக்கிறது. தங்களின்
மானிலத்தை உருவாக்கிய முன்னோடிகள் இவர்கள். தங்களுக்குக் கிடைக்காத எதிர்காலத்தை தங்கள்
குழந்தைகளின் கைக்கு எட்டும் தூரத்தில் வைத்திருக்கிறார்கள்.
To read in English, please click here.




Comments
Post a Comment